இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவைவிட பிதாவாகிய தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இயேசுவைவிட பிதாவாகிய தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா?
Permalink Closed


வேதாகமத்தில் தன்னை வெளிப்படுத்திய தேவனை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளுதல் என்பது சற்று கடினமான காரியமே. காரணம் தேவனின் பல்வேறு நாமங்கள் மற்றும்  ஆள்த்துவங்கள் குறித்து வேதாகமம் வெளிப்படுத்துகிறது, ஆகினும் தேவன் ஒருவரே எனபதை திட்டவட்டமாக வேதம் தெரிவிக்கிறது. இந்நிலையில் என்னுடய கருத்துப்படி தேவனை அறிதல் என்பது ஒரு அனுபவமேயன்றி ஆராய்தல் அல்ல. தேவன ஒருவருக்கு "தான் யார்? எப்படிபட்டவர்" என்பதை அவராகவே வெளிப்படுத்தினாலேயேஅன்றி யாரும் தேவனை பற்றி துல்லியமாக அறிந்துகொள்ள முடியாது.  
 
யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது
   
ஆகினும் நாம் தேவனின் சித்தம் என்னவென்பதை சரியாக அறிந்து நிறைவேற்ற அவரை  அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே நாம் வேதாகமத்தை படித்து  தேவனை அறிந்துகொள்ள முயற்ச்சிக்கிறோம். ஆனால் வேதாகமம் மற்ற புத்தகங்கள் போல வெளிப்படையான நேர் பொருள் தரும் புத்தகம் அல்ல. அது முந்திரிக் கப்பட்டதும் அனேக மறைபொருள்களை கொண்டதும் எக்காலத்திலும் யாருக்கும் பொருந்தக்கூடியதும்  மனுஷர்களிடம் நேரடியாக பேசக்கூடிய ஜீவ வார்த்தைகளை உள்ளடக்கியது. அதில் உள்ள
ஆழமான மறைபொருளான  கருத்துக்களை  விளங்கவைக்க அதை எழுதிக்கொடுத்த தேவ ஆவியானவராலே முடியும். ஆவியானவரும் வேதாகமம்  என்ற மாம்பெரும் போக்க்ஷத்தில் இருந்து அவரவர் தகுதி மற்றும்வாஞ்சை என்னை விருப்பம் இவைகளிக்கு ஏற்ப உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
 
எனவே ஒருவர் வேதத்தை படிப்பதன் மூலம் தேவனை பற்றி புரிந்து கொள்ளதான் முடியுமே அன்றி அவர் யார் எப்படிபட்டவர்  என்பதை  அவர் தன்னைப்பற்றி வெளிப்படுத்தினால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். என்னை பொறுத்தவரை தேவன் தன்னை பற்றி ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருப்ப்பதால் நான் அறிந்ததை இங்கு விளக்க முயல்கிறேன்.   
 
முதலில் வசனத்தின்படியே  ஆராய்ந்தால் ஆண்டவராகிய இயேசு இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

யோவான் 14:28  நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
இதற்க்கு இணையாக
 
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்.
 
இவ்வாறு இயேசு தன் வாயாலேயே மிகதெளிவாக என் பிதா என்னை விடவும் எல்லோரை விடவும் பெரியவர் என்று சொல்லிவிட்டதால் அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தால்  இப்படி ஒரு கேள்வி எழுவதே முதலில் சாத்தியம் இல்லை.  
 
ஆகினும் இயேசுவால் சொல்லபடாத, ஆனால பவுல் மற்றும் யோவான்  சுவிசேஷம் சொல்லும் வசனங்கள்  "இயேசு தேவனுக்கு சமமானவர்" என்பதுபோன்ற கருத்துடையதாக இருப்பதால் நாம் அதையும் கணக்கில் எடுத்து ஆராய்வது அவசியம்.    
 
பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

யோவான் 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

முதலில் பவுலைவிட யோவானைவிட  அன்றைய இஸ்ரவேலரைவிட  ஆண்டவராகிய இயேசுவுக்கு  தன்னைப் பற்றி அதிகமாகவே தெரிந்திருக்கும். எனவே  மற்றவர்கள் சொல்லும் வார்த்தையை நான்  சுலபமாக நிராகரிக்கலாம். ஆனால எந்த ஒரு வார்த்தையும் காரணம் இல்லாமல் வேத புத்தகத்தில் எழுதப்படவில்லை என்ற நோக்கிலோ  எந்த ஒரு வசனம் தவறான கருத்தை சொல்லவில்லை என்ற நோக்கிலேயே நாம் வேதத்தை ஆராய்வது அவசியம்.  சொல்லபட்டுள்ள ஒவ்வொரு வர்த்தைக்க்கு ஒரு விளக்கம் நிச்சயம்  இருக்கும் என்ற நோக்கிலேயே நாம் வேதத்தை ஆராயலாம்.  அப்படி பார்த்தால் இயேசு தேவனுக்கு சமமானவர் என்ற சொல்லின் பொருள் என்ன? 

இந்த பொருளை அறியும் முன்னர் சமம்  அல்லது  equal என்ற வார்த்தையை நாம் எங்கெல்லாம் எதற்ககெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை அறியவேண்டும்.

நான் என் அப்பாவுக்கு ஒரே பிள்ளை என்றால் சில காரணங்களின் அடிப்படையில் சிலை என்னை என் அப்பாவுக்கு சமம் என்று சொல்ல முடியும். அவரும் மனுஷர் நானும்ஒரு மனுஷன் அவருக்கும் என்னை போன்ற சாயல் ஆள்தத்துவம் எல்லாம் இருக்கிறது எனக்கும் இருக்கிறது, அவரும் ஒரு இந்திய குடிமகன் நானும் ஒரு இந்திய குடிமகன், அவருக்குள்ள சொத்து எல்லாமே எனக்குதான் வரும் என்பது போன்ற அனேக நிலைகளை  நான் என் அப்பாவுக்கு சமமாகலாம். ஆனால் வயது, தகுதி. வல்லமை, போன்ற காரணிகளால்  நான் அவரை விட சிரியவனாக இருக்க முடியும்.

இக்கருத்தின் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து பார்ப்பவர்கள் "இவரும் ஒரு இந்தியன் அவரும் ஒரு இந்தியன்" என்ற நிலையில் இவர் அவருக்கு சமம் என்று சொல்லி எங்கள் இருவரையும் சமமாக பாவிக்க  முடியும். ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும் நான் எனது அப்பாவை விட எந்த காரணிகளில் எல்லாம் சிறியவன் என்று.

இந்த கருத்துக்கு வேதாகம நிலையில் சரியான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் "பார்வோன் யோசேப்புவின்" நிலையை சொல்லலாம். 

யோசேப்பு அனைத்து காரியங்களிலும் பார்வனுக்கு சமமான நிலையில் உயர்த்தப்பட்டான் ஆனால் சிங்காசனம் என்ற நிலையில் மாத்திரம்  அவனைவிட பார்வோன் பெரியவனாக இருந்தான். வெளியில் இருந்து பார்க்கும் அநேகருக்கு யோசேப்பு பார்வோனுக்கு சமமானவன்  போலதான் தெரியும் ஆனால யோசேப்புக்குதான் தெரியும் பார்வோன் தன்னைவிட எந்தெந்த காரியங்களில் பெரியவர் என்று.   

ஆதியாகமம் 41:40 நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்.

அதுபோல் POWER OF ATTONEY HOLDAR ஐயும் எடுத்துகொள்ளலாம்.  ஒரு கம்பனியின் முதன்மை மேனேஜரை  எடுத்து கொள்ளலாம்.  வெளிப்பார்வைக்கு  இவர்தான் ஓணர்போல செயல்படுவதால் அவர்தான் ஓணர் என்றோ அவர்    சமமானவர் என்றோ எண்ணிக் கொள்ளலாம் அனால் முதலாளியைவிட  தான் எந்த விதத்தில் எல்லாம் சிறியவர் என்று அவர் ஒருவருக்கு தான் தெரியும்.

இதன் அடிப்படையில் பார்த்தால் இயேசு தேவத்துவம் உள்ளவராகவும்  தேவனை தன் சொந்த பிதா என்று சொன்னதாலும்  தேவனும் நானும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொன்னதாலும் அவர் சொற்கள்  செயல்பாடுகள் அற்ப்புத அதிசயங்கள் போன்ற அனேக கரியங்களில் அவர் தேவனுக்கு சமமாகவே இருந்தார் எனவே அந்த வசனத்தில் எந்த தவறும் இல்லை.         

அவர் எந்தெந்த காரியத்தில் எல்லாம் தேவனுக்கு சமமாக இருந்தார் என்று பார்த்தால்:

தேவத்துவத்தில் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார் 

தேவனுடய ஆவியானவர் அவரோடு தங்கியிருந்ததால் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார்      

தேவனின் கிரியைகளை செய்வதில் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார் 

பிதாவுடையது எல்லாம் அவருடையதாகவே இருந்ததால் அவர்  பிதாவுக்கு சமமாக  இருந்தார் 

தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதால் அவர் தேவனுக்கு சமமாக இருக்கிறார்.

தேவனுடைய ஏழு ஆவிகளையும் உடையவராக இருப்பதால் அவர் தேவனுக்கு சமமாக இருக்கிறார்  

இப்படி அனேக காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்  எனவே பவுலோ யோவானோ அல்லது நானோ கூட அவரை யாரும் தூதர் என்றோ அல்லது தேவதன்மை அற்றவர் என்றோ சொல்லிவிடாத படிக்கு அவர் தேவனுக்கு சமமானவர் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.  அவர் தேவனும் தேவனுக்கு சமமானவரும் தான் என்பதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் பிதாவாகிய தேவன் அவரைவிட  எந்த விதத்தில் பெரியவர் என்பதை இயேசு ஒருவரே அறிவார். ஏதோ ஓரிரு காரியங்களில் பிதா பெரியவராக இருந்ததால்தான் இயேசு "என் பிதா என்னிலும்  பெரியவர்" என்று சொல்லவேண்டிய அவசியம் இருந்திருக்க வேண்டும். அப்படி பிதாவானவர் எந்த தகுதிகளில் பெரியவர் என்பதை தேவனோ அல்லது இயேசுவோ  சொல்வதை வைத்துதான் நாம் புரிந்துகொள்ள முடியம். 

இந்த காரியங்களை குறித்து வசனம் என்ன சொல்கிறது என்பதை குறித்து பார்த்தால்:

இயேசுவை இன்று என்ற நாளில் ஜெனிப்பித்தவர் தேவன்

சங்கீதம் 2:7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

இயேசுவை ஜெநிப்பித்தவர் அவரது  தகப்பன் என்ற  ஸ்தானத்தில் பிதா இயேசுவுக்கு பெரியவராக இருந்தார்.  

இயேசுவை பாவத்துக்கு பரிகார பலியாக அனுப்பியவர்  தேவன்:  

யோவான் 8:42 நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

இயேசுவை பரிகார பலியாக அனுப்பியவர் அல்லது அனுப்பமுடிந்தவர் அல்லது ஒப்புகொடுத்தவர் என்ற ஸ்தானத்தில் பிதா இயேசுவைவிட பெரியவராக இருந்தார்

இயேசுவுக்கு "தம்மில்தாமே ஜீவடையவராக இருக்கும்படி அளுள் செய்தது தேவன்:   

யோவான் 5:26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.

இயேசுவுக்கு ஜீவனை அருள் செய்ததன் மூலம் அவர் இயேசுவைவிட பெரியவராக இருந்தார்.

பிதா எதை செய்து இயேசு கண்டாரோ அதைதான் இயேசு செய்தார் :

யோவான் 5:19   பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

இயேசுவுக்கு  திட்டங்களை வகுத்து கொடுத்து ஒரு இயக்குனராக  இருந்ததன் மூலம் தேவன் பெரியவராக இருக்கிறார்.  

இயேசு மரித்தபின்னர் ஆவியை தேவனிடமே ஒப்பு கொடுத்தார்.

லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

இயேசு தன் ஆவியை பிதவிடத்தில் ஒப்புகொடுத்ததன் மூலமும் பிதா  இயேசுவைவிட பெரியவராக இருக்கிறார்.

இயேசுவுடைய உபதேசம் மற்றும் அவருக்கு  உண்டானது எல்லாமே பிதாவுடையதுதான்.  

யோவான் 7:16  என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.

யோவான் 17:10 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்

இயேசுவுக்கு உண்டானதை எல்லாம் கொடுத்ததன் மூலம் பிதா  பெரியவராக இருக்கிறார்.  

இயேசுவுக்கு அளவில்லாத ஆவியை கொடுத்தவர் தேவனே!

யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

இறுதியாக, இயேசுவுக்கு தெரியாத காரியம் கூட தேவனுக்கு தெரியும்:  

மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

இயேசுவுக்கு தெரியாத காரியங்களை அறிந்திருப்பதன்  மூலம் பிதா இயேசுவைவிட பெரியவராக இருக்கிறார்    

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோல் பல காரியங்களில் ஆண்டவராகிய இயேசுவை விட தேவன் பெரியவராகவும் அனைதிலும் அனைத்தாக இருக்கிறார். அதை இயேசுவும் தெளிவாக  அறிந்து ஒப்புக்கொண்டு  தமது வாயாலேயே "பிதா என்னிலும் பெரியவர்" என்று சொல்லி  பிதாவை மகிமை படுத்தும்போது அதை  மனுஷர்களாகிய நாம் ஏற்க்க மறுப்பது எம்மாத்திரம்? 

"இயேசு மனுஷனாக இருந்தபோது இவ்வாறு சொன்னார் பின்னர் அப்படியல்ல" என்று விவாதம் பண்ண முடியும். ஆனால் இயேசு மரித்து உயிர்த்து மகிமை அடைந்த பிறகுகூட தன்னை தேவன் என்றோ  தேவனுக்கு சமம் என்று எங்கும் சொல்லாமல்  தன்னை தேவ குமாரன் என்றே சொன்னார்.    

வெளி 2:18 தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது

மேலும் இயேசு, தான் பூமியல் வாழ்ந்த காலங்களில் சொன்ன வார்த்தைகள்தான் கடைசி நாளில் நியாயம் தீர்க்கும் என்று சொல்லி யிருப்பதால் அவர் சொன்ன எந்த ஒரு கருத்தையும் இயேசுவோ தேவனோ மறுத்து சொல்லாத பட்சத்தில் அது எந்நாளுக்கும் பொருந்த கூடிய ஒன்றே.

இயேசு தேவ சித்தத்தை செய்வதிலும் ஆயிரம் வருட அரசாட்சிக்கு  பிறகு உலகத்தை தேவனிடம்  ஒப்புவிப்பதிலும் சரியான நிலையிலேயே செயல்படுகிறார். ஆனால் ஏனோ அநேகர் இயேசுவை  எல்லா விதத்திலும் தேவனுக்கு சமமாக அல்லது அவரையே ஒரே  தேவனாக உயர்த்திவிட வேண்டும் என்ற நோக்கிலேயே இருப்பதை அறிய முடிகிறது. அவர்களுக்கு இதக்குமேல் என்னிடம் விளக்கம்  இல்லை.       

என்னை பொறுத்தவரை,  இயேசுவை "ஒரு தூதன்" என்றும்,  தேவனின் ஆள்தத்துவம் இல்லை என்றும் சொல்லப்படும் கருத்தையே நான் மறுக்கிறேன். மற்றபடி  இயேசு தேவனுக்கு சமமா பெரியவரா சிறியவரா என்ற ஆராய்ச்சியே தேவையற்றது என்றே கருதுகிறேன்!

இயேசுவின் நாமத்திலன்றி பிதாவின் நாமத்தில்கூட இரட்சிப்பு பாவ மன்னிப்பு இல்லை!

அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்

பரிசுத்த ஆவியினவரின்றி இயேசுவாலோ பிதாவலோகூட  மீட்பின் நாளுக்கென்ற முத்திரை இல்லை.

எபேசியர் 1:13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
எபேசியர் 4:30
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த
ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

பிதாவின் சித்தம் செய்யாமல் யார் சித்தம் செய்தாலும் பரலோகம் இல்லை! (இதில் மேலேயுள்ள  இரண்டும் கூட பிதாவின் சித்தமே)  

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

இம்மூவரும்  ஒரே திட்டத்தை வெவேறு நிலைகளில் நிறைவேற்றி கொண்டிருக்கும் ஒரே தேவனே!  என்பதை  அவர் உணர்த்தினால் ஒருவர் புரிந்துகொள்ள அனேகநேரம் ஆகாது.  மூவரும் தங்கள் தங்கள்  செயல்பாடுகளில்  உயர்ந்தவர்களே/ முக்கியத்துவம் உள்ளவர்களே.  இவர்களை  இணைத்து  ஒருவராக பார்ப்பதே சிறந்ததன்றி,  அவர் அவருக்கு சமமா அல்லாது இவர் பெரியவரா அவர் பெரியவரா  என்று ஆராய அமர்வது தவறு. ஏனெனில் தேவன் ஒன்றுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால்தானே சமமா அல்லது பெரியவா என்ற கேள்வியே  எழும்பும். ஆனால் இங்கு எல்லாவற்றையும் செய்யும் தேவன் ஒருவரே.    

இல்லை இயேசுவையும் தேவனையும் ஒப்பிட்டு ஆராய்ந்துதான் ஆக வேண்டும் என்று  பிடிவாதமாக சொன்னால் இயேசு அவர் வாயாலேயே சொல்வதுபோல் "எல்லாவற்றிலும் எல்லாமாய் இருக்கும் தேவன்தான்  இயேசுவிலும் பெரியவர்/எல்லோரிலும் பெரியவர்!  இதை யாரும் மாற்றவும் முடியாது மறுக்கவும் முடியாது! அப்படி மறுத்தால் இயேசுவின் வார்த்தையும் வேத வசனமும்தான் பொய்யாகி போகும். அதை நான் செய்ய விரும்பவில்லை!

எனவே எனது கருத்தை ஏற்க்க முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள். தேவன் எனக்கு தெரிவித்த இந்த கருத்தில் இருந்து நான் மாற முடியாது. எல்லாவற்றிக்கும் வசன ஆதாரமும் இருக்கிறது. மற்றபடி கிறிஸ்த்தவத்தின் மற்ற எந்த கருத்தையும் நான் மறுக்கவில்லை.   



-- Edited by SUNDAR on Wednesday 8th of January 2014 01:30:57 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: இயேசுவைவிட தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா?
Permalink Closed


சகோதரரே...

நாம் விவாதிகிறவைகள் எல்லாம் வேதாகமத்தில் உள்ளவை தான்..

நீங்கள் முன்வைத்துள்ள வசனம்

யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது.

 இது தேவனின் தாசனாகிய யோபு கூறி இருந்தால் முன் வைக்க தகுதியானதே..

இவ்வசனம் யோபின் வாயில் இருந்து வராமல், தன் புதிஈனத்தில் இருந்து கர்த்தரை குறித்து நிதானமாய் பேசாத எலிகூ பேசினதே..இவன் நிதானம் இல்லாமல் பேசினபடியால் தேவகோபம் இவன் மீது மூண்டதே..

நான் ஏற்கனவே ஒருபதிவில் இதனை தெரிவித்திருந்தேன்..

ஆனால் அப்போஸ்தல விசுவாசத்தை பின்பற்றுகிற சுதந்திரவாளிகளாகிய நாமோ தேவ ஞானத்தின் ஆழங்களில் இருந்து மொண்டு தேவமகத்துவங்களை பேச வேண்டியவர்கள்..

பரிசுத்த ஆவியை பெற்றும் ஒருவர் தேவ மகத்துவங்ககளை அறியாமல் இருப்பது எப்படி?? முதன் முதலில் நம் அப்போஸ்தலர்கள் ஆவியால் நிரப்பட்ட பின்பு தேவ மகத்துவங்களை பேசினார்கள்.அறியாமல் எவ்வாறு சகோதரரே பேசுவார்கள்..ஆவியால் நிரப்பட்ட அவர்கள் உடனடியாகவே இவைகளை பேசி இருக்க..என்றோ அபிஷேகத்தை பெற்றதாக கூறும் நாம் தேவ மகத்துவங்ககளை அறிய முடியாது என அப்படியே முயற்சிக்காமல் விட்டுவிடுவது எப்படி..பின் வரும் வசனங்களை  பாருங்கள்..

அப்போஸ்தலர் 2:11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.

 நாம் தேவனுடைய மகத்துவங்களை பற்றிய அறிவற்று இருப்போமானால் மேற்கூறிய வேதவார்த்தைகளை தவறாய் அர்த்தம் கொள்பவர்களாவோம்.

 

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink Closed

JOHN12 wrote:

சகோதரரே...

நாம் விவாதிகிறவைகள் எல்லாம் வேதாகமத்தில் உள்ளவை தான்..

நீங்கள் முன்வைத்துள்ள வசனம்

யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது.

 இது தேவனின் தாசனாகிய யோபு கூறி இருந்தால் முன் வைக்க தகுதியானதே..

இவ்வசனம் யோபின் வாயில் இருந்து வராமல், தன் புதிஈனத்தில் இருந்து கர்த்தரை குறித்து நிதானமாய் பேசாத எலிகூ பேசினதே..இவன் நிதானம் இல்லாமல் பேசினபடியால் தேவகோபம் இவன் மீது மூண்டதே..

நான் ஏற்கனவே ஒருபதிவில் இதனை தெரிவித்திருந்தேன்..

 


சகீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்:   

 
சங்கீதம் 145:3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.
 
இதை ஏற்கலாமா சகோதரே?


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink Closed

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

மகத்துவத்தை பற்றிய ஆராய்ச்சி நிச்சயம் நித்திய ஜீவனுக்கு முன் முடியாது தான் சகோதரரே. நித்திய ஜீவன் என்பது தேவனை அறிகிற அறிவு.தேவனை அறிகிற அறிவிற்கு எல்லை இல்லை...

ஆராயா விட்டால் எங்கிருந்து அறிந்து கொள்ளமுடியும்..இந்த ஆராய்ச்சிக்கு முடிவிலி என சொல்லபடுகிற கால அளவு தேவைபடுகிறது..

நாம் தேவனை முழுமையாய் அறியும்படி முன்குறிக்கப்பட்ட காரியமே நித்திய ஜீவன்..

மகத்துவங்களை அறியலாம்.அந்த அறிவு பூமியில் பரிபூரனபடாது என்பதே என் தாழ்மையான கருத்து..

 

அதனால் தான் தேவ மகிமையை ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும் தாவீது பின்வருமாறு கூறுகிறார்..

சங்கீதம் 27:4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

ஆராயாவிட்டால் தேவமகதுவங்களை ஆராய்ந்து முடியாது என கூறி இருக்க இயலாது..

சங்கீதம் 145:3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.

 

I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

பிதாவை வெளிபடுத்தின குமாரன் ஆராய தான் சகோதரரே புத்தியை தந்துள்ளார்..தேவ மகத்துவங்களை நாம் ஆகவே ஆராயலாம்..

நம் முயற்சியை தேவன் அங்கீகரிப்பார்..



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink Closed

JOHN12 wrote:

பிதாவை வெளிபடுத்தின குமாரன் ஆராய தான் சகோதரரே புத்தியை தந்துள்ளார்..தேவ மகத்துவங்களை நாம் ஆகவே ஆராயலாம்..

நம் முயற்சியை தேவன் அங்கீகரிப்பார்..


சகோதரர் அவர்களே, நான் தேவனின் மகத்துவத்தை பேசக்கூடாது  என்றோ, பேச முடியாது என்றோ சொல்ல வில்லை மேலும் தேவனின் மகத்துவத்தை யாரும் ஆராயக்கூடாது என்றும் எங்கும்  சொல்ல வில்லை. நாம் நிச்சயம் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டும் அவரைப்பற்றி எப்பொழுதும் தியானித்து  ரஸ்தபம் பண்ணவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால்  நமது  மனுஷ  ஆராய்ச்சியால் தேவனின் மகத்துவத்தை முழுமையாக அறிந்துவிட முடியாது என்பதே என்னுடய கருத்து.   

யோபு 37:22 ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.

யோபு 31:23 தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.

தேவனுடைய மகத்துவம் ஒன்றோ இரண்டோ அல்ல!  அவர் பயங்கரமான மகத்துவமுள்ளவர்! அவர் வார்த்தையில் மகத்துவம்,  அவர செயலில்  மகத்துவம், அவரது வல்லமையில் மகத்துவம், அவரது இரக்கம்/ அன்பு/நீதி நேர்மை எல்லாமே, எல்லையில்லா மகத்துவம் உள்ளதுதான். அவற்றைபற்றி அவரே வேத புத்தகத்தில் நமக்கு  தெரிவித்திருக்கிறார். அதைப்பற்றி யாரும் பேசலாம்! பேச முடியும்! தியானிக்க முடியும்! ஆராய  முடியும்!

சங்கீதம் 66:2 அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.

இந்த உலகில் உள்ள தேவனை நம்பும் அநேகர் தேவனின்  மகத்துவத்தை ஓரளவுக்கேனும் அறிந்தே  அவரை நம்புகிறார்கள். வான வெளியிலிருக்கும் சூரியன் கூட அவரது மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. நாமும் தேவனையும் அவர் மகத்துவத்தையும்  அறிந்திருக்கிறோம் அறிந்ததை பேசுகிறோம் மேலும்  அறிய முயற்ச்சிக்கிறோம். ஆனால் இன்னும் அறிய முடியாதது பல மகத்துவங்கள் அவரிடம் உண்டு, அவரை யாராலும் முழுமையாக ஆராய்ந்து அறிந்துவிட முடியாது என்பதே வசனம் சொல்லும் கருத்து. 

யோபு 11:7 தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
 
சங்கீதம் 145:3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.
 
வசனம் "தேவனின் மகத்தும் அராய்ந்துமுடியாது" என்றும் சொல்லும் பட்சத்தில்  "நான் தேவனையும்  அவரது மகத்துவத்தை முழுதும் அறிந்துவிட்டேன், அவர்  மூன்று ஆள்தத்துவம்தான்" என்று ஒருவர் சொல்வாராகில் அவ்வாறு அறிந்தவர்கள  அதை அப்படியே நம்பட்டும், நான்  அதை எங்கும் மறுக்கவில்லை அதற்க்கு எதிர்த்து நிற்க்கவும் இல்லை. காரணம் தாங்கள் குறிப்பிடும் மூன்று ஆள்த்துவங்கள் பற்றி எனக்கும் தெரியும் பிதா/குமாரன்/பரிசுத்த ஆவி பற்றி நான் இந்த திரியிலும் எழுதியிருக்கிறேன். ஆனால்  என்னை பொறுத்தவரை, தேவனை நான்  மூன்றுக்கு மேற்ப்பட்டவராக  அறிந்திருப்பதாலும், அதற்க்கு வசன ஆதாரமும் இருப்பதால் மற்ற மனுஷர்கள் சொல்வதை  கேட்டு, தேவன் இப்படித்தான் என்ற ஒரு  முடிவான நிலைக்கு வர முடியவில்லை, வரவேண்டிய  அவசியமும்  இல்லை  என்பதே என்னுடய கருத்து. 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink Closed

தேவனை பற்றிய புரிதலை விளக்கும்படிக்கு அனேக வசன ஆதாரத்தோடு கூடிய என்னுடைய இந்த பதிவுக்கு சரியான  எதிர் கருத்து இருந்தால் தங்கள்  கருத்துக்களை  வசன  ஆதாரத்தோடு பதிவிடும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன் 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink Closed

சகோதரர் சுந்தர் அவர்களே,

யோவான் 14:28  நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

இதற்க்கு இணையாக,
 
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்.

வேத வசனங்கள் தனித்தனியாயும், ஒன்று சேர்ந்தும் நமக்கு இறை வெளிப்பாட்டை தருவதாக இருக்கிறது. அனேக நேரங்களில் தனித்தனி வசனம் கூட இறை வெளிப்பாட்டை தருகிறது. அந்த வகையில் மேற்கண்ட வசனத்திலிருந்து,

பிதாவானவர் இயேசு கிருஸ்துவை விட பெரியவராயிருக்கிறார் என்ற சத்தியத்தை, அதுவும் இயேசு கிருஸ்து அவரே தன் வாயால் சொன்ன சத்தியத்தை அறிய முடியும்.

இந்த உண்மைக்கு மாறாக, வேதத்தில் இல்லாத திரித்துவம் என்ற கோட்பாட்டை  போதிப்பவர்கள், இயேசு கிருஸ்துவும், பிதாவும் சமமானவர்களே என சொல்கிறார்கள். இவர்கள் இவ்வாறு சொல்வதற்கு காரணம் என்ன என்பதையும், அதை ஏன் அவ்வளவு ஆழமாக வலியுறுத்தி வருகிறார்கள் என்பதையும் நாம் அறிய வேண்டும். அதற்கு முன்பாக இன்னும் சில வேத வசனத்துக்கான விளக்கத்தை பார்ப்போம்.

யோவான் 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

இஸ்ரேலில் யூதர்கள், தங்களை மனிதர்கள் எனவும், தேவன் மாத்திரமே இறைவன் எனவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இயேசு கிருஸ்து தன்னை இறைவனின் மகன் என்றார். மனிதனாய் இருக்கிற ஒருவர் தன்னை மனிதன் என்று சொல்லாமல்,  இறைவனோடு சம்பந்தம் உள்ளவராக காட்டி கொண்டதால்,  அவர் தன்னை தேவனுக்கு சமமாக்கி தேவ தூஷணம் செய்தார் என்று யூதர்கள் கருதினர்.

இந்த வசனமானது, இயேசு கிருஸ்துவை விட பிதா பெரியவராய் இருக்கிறார் என்ற வசனத்தை எந்த வகையிலும் அவமாக்கவில்லை என்பதை அறிய வேண்டும். இயேசு கிருஸ்துவும், எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கூட தேவன் பிதாவாயிருக்கிறார் என்ற செய்தியையே தன் சீடர்களுக்கு சொன்னார்.  இதன் மூலம் நாம் எல்லாரும் பிதாவை தலைமையாய் கொண்ட ஒரே குடும்பமாய் இருக்கிறோம் என்பதே அவர் சொன்ன செய்தி. அந்த குடும்பத்தில் அவர் மூத்த சகோதரராயும், நாம் இளைய சகோதரராயும்  இருக்கிறோம்.

இதன் மூலம் தேவன், மனிதன் என்ற உயர்வு, தாழ்வு இல்லாமல், நாம் அனைவரும் ஒரே குடும்பத்திற்குள்ளாக, தேவ குடும்பத்திற்குள்ளாக வந்தோம்.

அடுத்த வசனம்,

பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

இயேசு கிருஸ்து தேவனுடைய ரூபமாயிருக்கிறார். அதனால் இவரும், பிதாவும் சமமானவர்கள் என்பதால் பிதா, இயேசு கிருஸ்துவை விட பெரியவர் அல்ல என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இந்த வசனமும் முன் சொன்ன வசனங்களை பொய்யாக்கவில்லை. மகன் தந்தையை போலவே இருப்பதால், மகனும், தந்தையும் ஒரே அளவானவர்கள் என சொல்ல முடியாது.  அப்போதும் பிதா தான் பெரியவர்.

(தொடரும்)



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink Closed

திரித்துவத்தின் முக்கிய அம்சம் பிதா, இயேசு கிருஸ்து, பரிசுத்த ஆவியானவர் மூவரும் தெய்வீக அளவில் ஒரே அளவாக இருகிறார்கள் என்பதே. இதை நிரூபிக்க வேதத்தில் ஆதாரம் இல்லை. உதாரணமாக மூவரும் தெய்வீக அளவில் சமம் எனில் மூவரிடமும் ஜெபிக்கலாம் என்று அர்த்தம் வருகிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரிடத்தில் ஜெபிக்க சொல்லி வேதம் எங்குமே சொல்லவில்லை. மாறாக அவர் நமக்காக ஜெபிப்பார் என்றே வேதம் சொல்கிறது.  அது மட்டுமல்லாது இயேசு கிருஸ்து கூட பரலோகத்தில் நமக்காக பிதாவை நோக்கி வேண்டுதல் செய்கிறார் என வேதம் சொல்கிறது.

இதிலிருந்து தெய்வீக நிலையை எடுத்து கொண்டால் கூட பிதா-குமாரன்-பரிசுத்த ஆவி என மூவரும் வரிசைக்கிரமமாக இருப்பதை பார்க்க முடியும்.

இதை பற்றி கேட்டால் திரித்துவத்தை புரிந்து கொள்ள முடியாது என சொல்லி மழுப்பி விடுவார்கள். அப்படியானால் புரிந்து கொள்ள முடியாததை எதற்கு போதிக்க வேண்டும்?

இயேசு கிருஸ்துவின் தெய்வத்தன்மையை நிரூபிப்பதற்காக திரித்துவ கோட்பாட்டை கொண்டு வந்ததாக சொல்கின்றனர். ஆனால் இதற்கு வேறு சில நோக்கங்களும் உண்டு. அவைகளை இப்போது பார்ப்போம்.

1. தேவன் தந்த வேதமானது, எல்லா மக்களுக்கும் புரியும்படி மிக எளிமையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ளதை அப்படியே போதித்தால், போதகரை, மேய்ப்பரை யாரும் மதிக்க மாட்டார்கள். ஆகவே முதலில் அதில் இருப்பதை புரியாதபடிக்கு செய்ய வேண்டும். பிறகு தங்களுக்கு அந்த புதிர் விடுபட்டு விட்டதாக காட்டி கொண்டு, அதைப் பற்றி போதிக்க வேண்டும்.

இப்படி செய்தால், சாதாரண விசுவாசிகளால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்றை தங்கள் மேய்ப்பரோ, போதகரோ புரிந்து கொண்டதாக கருதி விசுவாசிகள் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை கொள்வார்கள். அவரை மிகவும் பெரியவராக மதிப்பார்கள். இதனால்தான் திரித்துவ கோட்பாட்டை மிகவும் ஆழமாக இன்றைய போதகர்கள் வலியுறுத்துகிறார்கள்.

2 கொரிந்தியர் 13.14. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

மிகவும் எளிமையான மேற்கண்ட வசனத்தை, சாதாரண விசுவாசிகள் புரிந்து கொள்ள கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இன்றைக்கு அனேகர் சொல்லும், நம்பும் திரித்துவ கோட்பாடு. இதை நேரடியாக வேதத்தில் இருந்து புரிந்து கொள்வது கடினம் என்பதால்தான், புதிதாக உருவாகும் பாஸ்டர், போதகர் போன்றோருக்கு வேத படிப்பு கற்று கொடுக்க வேத பாட சொலைகள் இருக்கின்றன.

தாங்கள் சொல்லும் திரித்துவத்தை எப்படி, எப்படியெல்லாம் சுற்றி வளைத்து  நிரூபிப்பது என கற்று தர, எதிர்த்து பேசுபவர்களை எப்படி மிரட்ட வேண்டும், சபிக்க வேண்டும் என சொல்லி தர  வேத பாட சாலைகள் இருக்கின்றன. திரித்துவ கோட்பாட்டால் இவர்கள் ஸ்தாபனங்களும் செழிக்கின்றன.

ஆக திரித்துவ கோட்பாட்டின் ஒரு நோக்கம், புரியாத ஒன்றை சொல்லி, பிறகு அதை விளக்குவதாக சொல்லி,  அதன் மூலம் தங்களை அனேக விஷயங்கள் தெரிந்தவராக காட்டி கொண்டு, இவ்வாறு விசுவாசிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகும்.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
இயேசுவைவிட தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா?
Permalink Closed


Bro.Sundar///ஆனால்  என்னை பொறுத்தவரை, தேவனை நான்  மூன்றுக்கு மேற்ப்பட்டவராக  அறிந்திருப்பதாலும், அதற்க்கு வசன ஆதாரமும் இருப்பதால் மற்ற மனுஷர்கள் சொல்வதை  கேட்டு, தேவன் இப்படித்தான் என்ற ஒரு  முடிவான நிலைக்கு வர முடியவில்லை, வரவேண்டிய  அவசியமும்  இல்லை  என்பதே என்னுடய கருத்து.// 

அன்பு சகோதரரே,

நான் தங்களுக்கு விருதாவாய் எழுத விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் விவாதத்தில் பங்கேற்றாலும்,அதன் முடிவுகள் வசனத்தின் படி திருத்தப்பட்டாலும் தங்களின் முந்தின நிலையில் நிலைத்திருக்க விரும்புகிறீர்கள். அதில் நான் இடைபட்டு கூற ஒன்றும் இல்லை.. அதைப்பற்றி போதுமானவரை விவாதிக்கபட்டாயிற்று.. 

இயேசுவுக்குள் தங்களுக்கு நான் கூற விழையும் கருத்து என்னவெனில், தங்களுடைய இத்தகைய (அனேக ஆள்ததுவ )விசுவாச நிலையை வேதத்தின்படி தங்களால் மெஇபிக்க இயலாது. 

வேதம் கூறும் மூலஉபதேசம் செத்தகிரியைகளால் நம்பப்பட்டு,வேதத்திற்கு வெளியே நம்பபடுவதல்ல...

எபிரெயர் 5:12 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.

எபிரெயர் 6:1 ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,

Glory to GOD!!!



-- Edited by JOHN12 on Monday 6th of January 2014 01:50:08 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: இயேசுவைவிட தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா?
Permalink Closed


அன்பு சகோ.சந்தோஷ் அவர்களே,

சகோ .சந்தோஷ் //ஆக திரித்துவ கோட்பாட்டின் ஒரு நோக்கம், புரியாத ஒன்றை சொல்லி, பிறகு அதை விளக்குவதாக சொல்லி,  அதன் மூலம் தங்களை அனேக விஷயங்கள் தெரிந்தவராக காட்டி கொண்டு, இவ்வாறு விசுவாசிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகும்.///

சிலரிடம் அப்படி இருக்க வாய்ப்புண்டு!! ஆனாலும் அனைவரும் அப்படி தான் என்பது நாம் அடுத்தவரை நம்முடைய அளவின்படி நியாயந்தீர்ப்பதாகும்.

சகோ .சந்தோஷ் //இயேசு கிருஸ்து தேவனுடைய ரூபமாயிருக்கிறார். அதனால் இவரும், பிதாவும் சமமானவர்கள் என்பதால் பிதா, இயேசு கிருஸ்துவை விட பெரியவர் அல்ல என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இந்த வசனமும் முன் சொன்ன வசனங்களை பொய்யாக்கவில்லை. மகன் தந்தையை போலவே இருப்பதால், மகனும், தந்தையும் ஒரே அளவானவர்கள் என சொல்ல முடியாது.  அப்போதும் பிதா தான் பெரியவர்.//

கிறிஸ்துவ ஆசாரியத்தில் துவைத்தம்,அவைத்தம் என்று பிரிவினை கிடையாது.ஒவ்வொருவனுக்கும் தனி தனி தேவன் இல்லை. ஒரே தேவனை வேதம் போதிக்கிறது.

யார் பெரியவர் போட்டி நிகழ இரண்டு தேவன் தேவை.. ஆனால் தேவன் ஒருவரே!!

இந்துமதத்தில் மூன்று கடவுல்களுக்கு மத்தியில் போட்டி உருவானதாகவும்,பின் சிவன் மக தேவனாக அறியபட்டதாகவும் கதைகள் உண்டு.

ஆனால் கிறிஸ்துவத்தில் ஒரேதேவன்.போட்டியில்லை. அவாறு ஒருவன் போட்டி இடுவானேயானால் அவன் நமது வேதத்தில் சத்துருவாக அறியப்படுகிறான்..

நவீனமாக அறிவியல் வளராத காலகட்டத்தில் வேவ்வேறு நாடுகளை சார்ந்த மூன்று ஞானிகள் இயேசுவை நட்சத்திரத்தை பின்பற்றிகொண்டு தேடி சாஸ்டாங்கமாய் நமஸ்கத்ரித்ததினாலேயும்,காணிக்கையை செளுதினதின் நிமித்தமும் சபிக்கபட்டார்கள் என வேதம் சொல்லவில்லை.

மத்தேயு 2:11 அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

குமாரன் மனுஷனாகி தேவதூதரிலும் சற்றே சிரியவாராக்கபட்டபோதும் தேவதூதரால் வணங்கபட்டார் என்பதே வேதம் சொல்லுவது . 

எபிரெயர் 1:6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.

பிதா பெரியவர் இது முழு அங்கிகரிப்பிற்கும் உரிய நம்பிக்கை. அதே போல குமாரனும் பெரியவர் என்பதை சிலர் அறியவிரும்பவில்லை போலும்.. பின்வரும் வசனத்தை பாருங்கள்..

அனேக முறை அனேக சகோதரர்கள் கூறுவதுபோல இயேசு தம் வாயாலே பிதா பெரியவர் எனக் கூறினார் என்பது உண்மை. அது அவர் பிதாவிற்கு கீழ்பட்டிருந்தார் என்பதற்கான ஒரு ஆதார வசனம். இயேசு சிறியவர் என்கிறதற்கு அதார வசனம் அல்ல!!! 

குமாரனும் பெரியவர் என வேதம் சொல்லுகிறது.. தன்னை பெரியவர் என எசுவானவர் ஒருபோதும் சொல்லாததாலே சிறுமையாக்கபற்றிருக்கிறார் போலும். 

லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

மேலும் ஒரு தீர்மானத்தை குறித்து வேதம் சொல்லுகிறது,

சங்கீதம் 2 

7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

தீர்மானத்தின் விவரத்தை சொல்லுகிறவரை நோக்கி கர்த்தர் பேசினவைகள் இவைகள். தீர்மானத்தை இங்கு விவரிக்கிறவர் தான் குமாரனாய் ஜநிப்பிக்கபடபோகிறவர் என்பதை தமிழ் தெரிந்தவர் மறுக்க இயலாது.

ஆக, ஜெனனமாவதர்க்கு இருபத்தெட்டு தலைமுறைகளுக்கு முன்னமே  'தீர்மானத்தை விவரிக்கிற ஆள்தத்துவம்' குமாரனாய் முன்குறிக்கப்பட்டது. இந்த முழு விபரமும் தாவீதிற்கு வெளிப்படுத்தப்பட்டு,தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டது. 

இப்போது சகோ.சந்தோஷ் அவர்களுக்கான  எனது கேள்வி!!

குமாரனாக முன்குறிக்கபடுவதர்க்கு முன்பு "குமாரன் " என முன்குறிக்கப்பட்டு அழைக்கப்பட்ட ஆள்தத்துவதின் நாமம் என்ன? அவரது மகிமை என்ன?

சத்துருக்களை பாதபடியாகி (சங்கீதம் 110 ) போடப்படும் வரைமட்டும் தான் பிதாவின் வளதுபாரிசதில் இயேசு அமர முடியுமா ?? அதன் பின் அவர் மகிமை என்ன??

மாற்கு 12:36 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.

குமாரனை உடையவரே பிதா. குமாரன் இல்லாமல் பிதா என்று எவ்வாறு அவர் அழைக்கபட்டிருக்க கூடும்?

தேவனுக்கே மகிமை உண்டாகுக!!!



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink Closed

சகோதரர் ஜான் 12 அவர்களே,

//கிறிஸ்துவ ஆசாரியத்தில் துவைத்தம்,அவைத்தம் என்று பிரிவினை கிடையாது.ஒவ்வொருவனுக்கும் தனி தனி தேவன் இல்லை. ஒரே தேவனை வேதம் போதிக்கிறது.

யார் பெரியவர் போட்டி நிகழ இரண்டு தேவன் தேவை.. ஆனால் தேவன் ஒருவரே!! //

நீங்கள் சொன்னது சரியே. ஒரே தேவனை பற்றியே இயேசு கிருஸ்துவும், அவருடைய சீடர்களும் சொன்னவைகள்.

பவுல் எழுதியது :

1 கொரிந்தியர் 8.6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

1 தீமோத்தேயு 2.5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
7. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

யாக்கோபு எழுதியது :

யாக்கோபு 1.1. தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:
27. திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

பேதுரு எழுதியது :

1 பேதுரு 1.2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

யோவான் எழுதியது :

1 யோவான் 1.5. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
6. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.
7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

யூதா எழுதியது :

யூதா 1.1. இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:

குமாரனை விடவும்  பிதா பெரியவராய் இருக்கிறார் என்பதே வேதத்தின்படி நாம் அறிவது.  நம்மோடு ஒப்பிடுகையில்  குமாரன் பெரியவராயும், குமாரனை விட  பிதா பெரியவராயும் இருக்கிறார். இது இயேசு கிருஸ்துவின் பெருமையை எந்தவிதத்திலும் குறைவுபடுத்தாது. இயேசுவை சிறியவர் என்றோ, சிறுமையாக்கப்பட்டவர் என்றோ யாரும் சொல்லவில்லை. அப்படி சொல்வதாக நினைத்து கொள்வது உங்களுடைய கற்பனையே.

//குமாரனாக முன்குறிக்கபடுவதர்க்கு முன்பு "குமாரன் " என முன்குறிக்கப்பட்டு அழைக்கப்பட்ட ஆள்தத்துவதின் நாமம் என்ன? அவரது மகிமை என்ன? //

அவரது ஆள்தத்துவத்தின் நாமம் மெல்கிசேதேக்கு அவரது மகிமை மெல்கிசேதேக்கின் மகிமையாகும். அவர் கர்த்தருடைய தூதனானவர் என்ற பெயரிலும் இருந்தவர்.

//சத்துருக்களை பாதபடியாகி (சங்கீதம் 110 ) போடப்படும் வரைமட்டும் தான் பிதாவின் வளதுபாரிசதில் இயேசு அமர முடியுமா ?? அதன் பின் அவர் மகிமை என்ன??//

தனக்கென குமாரர்களை உருவாக்கின பின்பு  இயேசு கிருஸ்து பிதாவுடன் ஐக்கியமாகி விடுவார். அப்போது அவர் பிதா என்றும் தேவன் என்றும் குறிப்பிடப்படுவார்.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink Closed

சகோ.சந்தோஷ் அவர்களே,

//குமாரனை விடவும்  பிதா பெரியவராய் இருக்கிறார் என்பதே வேதத்தின்படி நாம் அறிவது.  நம்மோடு ஒப்பிடுகையில்  குமாரன் பெரியவராயும், குமாரனை விட  பிதா பெரியவராயும் இருக்கிறார். இது இயேசு கிருஸ்துவின் பெருமையை எந்தவிதத்திலும் குறைவுபடுத்தாது. இயேசுவை சிறியவர் என்றோ, சிறுமையாக்கப்பட்டவர் என்றோ யாரும் சொல்லவில்லை. அப்படி சொல்வதாக நினைத்து கொள்வது உங்களுடைய கற்பனையே.//

இல்லை சகோதரரே, நான் இவ்வாறு எண்ண காரணம் உண்டு.. தலைப்பை படியுங்கள். இது ஒரு ஒரு தலைபட்சமான தலைப்பு. இயேசுவை விட பிதா பெரியவரா? என தொடங்கியிருக்கவேண்டும். 

//அவரது ஆள்தத்துவத்தின் நாமம் மெல்கிசேதேக்கு அவரது மகிமை மெல்கிசேதேக்கின் மகிமையாகும். அவர் கர்த்தருடைய தூதனானவர் என்ற பெயரிலும் இருந்தவர்.//

குமாரன் வேறு,மேல்கிசேதேக்கு வேறு.. இவர் குமாரனுக்கு ஒப்பானவர்,வம்ச வரலாறு அற்றவர் . குமாரனில்லை!! (தனி தரியில் மெல்கிசேதேக்கை பற்றி எழுதியுள்ளேன்).தங்களுக்கு ஆட்சேபம் இருப்பின் அங்கு விவாதிக்கலாம்.

//தனக்கென குமாரர்களை உருவாக்கின பின்பு  இயேசு கிருஸ்து பிதாவுடன் ஐக்கியமாகி விடுவார். அப்போது அவர் பிதா என்றும் தேவன் என்றும் குறிப்பிடப்படுவார்.//

அவர் நித்திய பிதா என்றும் தேவன்,வல்லமையுள்ள தேவன் எனவும் ஏற்கனவே அழைக்கப்பட்டுள்ளார்.

யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஆக, தேவகுமாரர்களை உருவக்கின'பிறகு' இயேசு கிருஸ்து பிதாவுடன் ஐக்கியமாகி விடுவார் என்பது தவறு. மேலும்,

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

ஐக்கியம் இல்லாமல் ஒன்றாயிருப்பது கூடாத காரியம். பிதா எப்போதும் குமாரனோடு  ஐக்கியப்பட்டிருக்கிறார். சத்துருக்கள் பரிகரிக்கபடும் முன்னமே கூட  இயேசு கிறிஸ்து பிதாவுடன் ஐக்கியத்தில் உள்ளவர் என்பதையும் தாங்கள் அறியவேண்டும். ஆகவே வெளிபடபோகும் குமாரனின் கோபம் பூமியில் அவரது மகிமையை தெரியப்படுத்தும். 

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink Closed

சகோதரர் ஜான் 12 அவர்களே,

//இல்லை சகோதரரே, நான் இவ்வாறு எண்ண காரணம் உண்டு.. தலைப்பை படியுங்கள். இது ஒரு ஒரு தலைபட்சமான தலைப்பு. இயேசுவை விட பிதா பெரியவரா? என தொடங்கியிருக்கவேண்டும்.//

சகோதரரே, மிக சரியான ஒன்றை சுட்டி காட்டியிருக்கிறீர்கள். நன்றி. நான் அதை கவனிக்கவில்லை. இயேசு கிருஸ்து "வல்லமையுள்ள தேவன்" என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் "இயேசுவை விட தேவன் பெரியவரா?" என்று கேள்வி கேட்பது, இயேசு கிருஸ்துவை தேவன் இல்லை என்று மறுதலிப்பது போல இருக்கிறது.

சகோதரர் சுந்தர் அவர்கள் வேத வசனத்தின்படியே "இயேசுவை விட பிதா பெரியவரா?" என்று தலைப்பை மாற்றுவார் என எதிர்பாக்கிறேன். இந்த திரியின் தலைப்பை வேத வசனத்திற்க்கு சரியாக மாற்றும்படி அவரை கேட்டுக் கொள்கிறேன்.

//குமாரன் வேறு,மேல்கிசேதேக்கு வேறு.. இவர் குமாரனுக்கு ஒப்பானவர்,வம்ச வரலாறு அற்றவர் . குமாரனில்லை!! (தனி தரியில் மெல்கிசேதேக்கை பற்றி எழுதியுள்ளேன்).தங்களுக்கு ஆட்சேபம் இருப்பின் அங்கு விவாதிக்கலாம்.//

நீங்கள் சொல்வது போலவே தனி திரியில் விவாதிக்கலாம்.

//தனக்கென குமாரர்களை உருவாக்கின பின்பு  இயேசு கிருஸ்து பிதாவுடன் ஐக்கியமாகி விடுவார். அப்போது அவர் பிதா என்றும் தேவன் என்றும் குறிப்பிடப்படுவார்.//

இயேசு கிருஸ்து தேவன் என பிறக்கும் முன்பே அழைக்கப்பட்டார் என்பது சரியே. நான் அதை மறுக்கவில்லை.  தனக்கென குமாரர்களை உருவாக்கின பின்பு  இயேசு கிருஸ்து பிதாவுடன் ஐக்கியமாகி விடுவார் என்பதன் அர்த்தம் என்னவெனில், அப்போது பிதா மட்டுமே இருப்பார். குமாரன் இருக்க மாட்டார்.  ஆனால் இப்போதோ, பிதாவோடு கூட குமாரன் இருக்கிறார்.  அதனால் இயேசு கிருஸ்து "எதிர்கால பிதா" என அழைக்கப்படுகிறார்.  இந்த காரியம் பவுலுக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

வெளி.21.5. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். 6. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

7. ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

என்னுடைய பிதா, என்னுடைய தேவன் என சொல்லி எப்போதும், தன் பிதாவை மகிமைப்படுத்தின இயேசு கிருஸ்து, மேற்கண்ட வசனத்தில் நான் அவனுக்கு தேவனாயிருப்பேன் என்றும் அவன் எனக்கு குமாரனாயிருப்பான் என்றும் சொல்கிறார்.  இதைப் போல அவர் பூமியில் இருக்கும் போதோ, பரலோகத்தில் இருக்கும் போதோ (அதாவது இப்போதோ), சொன்னதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"எதிர்கால பிதா" என்பது "நித்திய பிதா" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆதாரத்துக்கு கீழ்கண்ட லிங்கை பார்க்கவும்.

http://www.scripture4all.org/OnlineInterlinear/OTpdf/isa9.pdf



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink Closed

2. அப்போஸ்தலர்கள் காலத்தில் இயேசுவின் சீடர்கள் தாழ்மை உள்ளவர்களாய், உண்மை உள்ளவர்களாய் இருந்தனர். அவர்கள் தங்களை உயர்த்தி கொள்ள எண்ணாமல், தாழ்மையோடு இருந்து சுவிசேஷத்தை அறிவித்தனர். ஆனால் அதற்கு பின்னான கால கட்டத்தில் வந்தவர்கள்,  மனிதர்களை அடிமை கொண்டு அதன் மூலம் கிருஸ்துவத்தை பரப்ப / போதிக்க முடிவு செய்தனர்,

அதற்காக ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களை அடிமைகளாக்க வேண்டும் என நினைத்தனர். (ஒரு வேளை இதை அவர்கள் நல்ல மனத்தோடு கூட நினைத்திருக்கலாம்). ஆனால் அதை நிறைவேற்ற அவர்களுக்கு  ஒரு தடை இருந்தது. அந்த தடையை போட்டவர் வேறு யாரும் அல்ல. இயேசு கிருஸ்துவே. அவர் சொன்னதாவது : நீங்கள் அனைவரும் சகோதரர்கள். கிருஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராகவும், குருவாகவும் இருப்பார். எனவே நீங்கள் உங்களுக்கு பட்டங்களை சூட்டி கொண்டு மனிதர்களிடமிருந்து உங்களை உயர்த்தி காண்பித்து கொள்ளாதீர்கள் என்பதே.

அவர் நானே நல்ல மேய்ப்பனாய் இருக்கிறேன். நான் என் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுத்தேன். என்றும் சொன்னார்.

மற்ற மனிதர்களின் மேல் ஆளுகை செய்ய வேண்டும் என நினைத்தவர்கள், தங்களுக்கு பட்டங்களை சூட்டிக் கொள்ள முடிவு செய்தனர். அதற்காக இயேசு கிருஸ்துவிடமிருந்து பட்டங்களை பிடுங்கி கொள்ள நினைத்தவர்கள், அதற்கு என்ன வழி என யோசித்தனர். அப்போது அவர்களுக்கு உதித்ததுதான் இன்று அவர்கள் சொல்லும் திரித்துவ கோட்பாடு. இதன் மூலம் இயேசு கிருஸ்துவை பிதாவுக்கு நிகராக்கின அவர்கள், இயேசு கிருஸ்துவின் போதகர், பாஸ்டர், குரு, வழி முதலிய பட்டங்களை அவரிடமிருந்து பிடுங்கி கொண்டு தங்களுக்கு அந்த பட்டங்களை சூட்டிக் கொண்டனர்.

ஆக தவறான, வேத வசன ஆதாரம் இல்லாத, திரித்துவ கோட்பாட்டின் நோக்கம், இயேசு கிருஸ்துவின் ஸ்தானங்களை தங்களுக்காக பிடுங்கி கொள்வதே.  வேதத்தில் இல்லாத வார்த்தையான திரித்துவத்தை சுற்றி வளைத்து விமர்சிக்கும் இவர்கள், இயேசு கிருஸ்து நேரடியாக சொன்ன வசனங்களை கண்டு கொள்ளாமல் விட்டதேன்?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: இயேசுவைவிட பிதாவாகிய தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா?
Permalink Closed


"தேவன்" என்ற பதம் பொதுவாக "பிதாவாகிய தேவனை"  குறிக்கிறது என்பதற்கு வேதத்தில் அனேக ஆதாரங்கள் உண்டு அவற்றுள் சில 
 
யோவான் 8:41  ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.
 
I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; 
 
 
ஆகினும் சகோ. ஜான்12 மற்றும் சகோ. சந்தோஷ் சுட்டியிருப்பது போல திரியின் தலைப்பு நான் எழுதியிருக்கும் கருத்தை சற்று மாற்றி காண்பிப்பது போல் இருப்பதால் 
 
திரியின் தலைப்பில் இருக்கும் "தேவன்" என்ற பதம் "பிதாவாகிய தேவன்" என்று மாற்றப்படுகிறது.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard